வருடாந்திர ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 2025 :
தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட இடங்களில் (ஈர நிலங்கள் மற்றும் நிலப்பகுதிகள்) மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 2023 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் பறவைகளை கண்காணிப்பதன் நோக்கம் பறவைகளின் இருப்பை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், அவற்றின் வாழ்விடங்கள் தொடர்பான அச்சுறுத்தல் காரணிகள் உள்ளிட்ட பிற முக்கிய சூழல் அம்சங்களையும் பதிவு செய்து, பறவைகளின் வாழ்விடப் பாதுகாப்புக்கான சிறந்த நீண்டகாலத் திட்டங்கள் வடிவமைக்க உதவுகிறது. இவை பறவை இனங்களின் செயல்பாடுகள், பரவல் மற்றும் செறிவு பற்றிய உள்நோக்கை வழங்கி பறவைகள் பாதுகாப்பு முயற்சிகளுக்கு உதவுகிறது.
தமிழ்நாட்டில் இடம்பெயரும் பறவைகள் பருவம், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபரில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை தொடர்கிறது. பறவைகள் சரணாலயம் மற்றும் பாதுகாப்பு சரணாலயங்களில் உள்ள பறவைகளை கண்காணிப்பது ஒரு தொடர்ச்சியான பயிற்சியாக இருந்தாலும், பறவைகளின் பல்வேறு வாழ்விடங்களில் மாநில அளவிலான கண்காணிப்பு பயிற்சியும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு வனத்துறையால் நடத்தப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு மார்ச் 2025 மாதத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு, அழிந்து வரும் பறவைகள் மற்றும் இரவு நேர பறவைகளை ஆவணப்படுத்துவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தது. இந்த கணக்கெடுப்பில், தமிழ்நாட்டில் அழிந்து வரும் 37 பறவை இனங்களில், 26 இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 17 இரவு நேரப் பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சின்னக்கொக்கு/கள்ளவாயன் (Little egret), சிறிய நீர்க்காகம் (Little cormorant), நத்தைகுத்தி நாரை (Asian open bill), கருந்தலை அரிவாள்மூக்கன் (Black headed Ibis), அன்றில் (Glossy Ibis) மற்றும் குளக்கொக்கு (Indian pond Heron) ஆகியவை வசிக்கும் பறவைகளில் மிகவும் பொதுவான பறவைகளாக காணப்பட்டன.
சாம்பல்நிற வாத்து (Greylag Goose), பெரும் பூநாரை (Greater Flamingo), பெரியகோட்டான் (Eurasian Curlew), கோணமூக்கு உள்ளான் (Pied Avocet), சிறிய கொண்டை ஆலா (Lesser Crested Tern) மற்றும் கரண்டிவாயன் (Eurasian Spoon bill) ஆகியவை புலம்பெயர்ந்த பறவைகளில் மிகவும் பொதுவான பறவைகளாக காணப்பட்டன.
எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நினைவகம் கட்டப்பட்டுள்ளது.