CURRENT AFFAIRS IN TAMIL MAY 2025 (08.05.2025-10.05.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL MAY 2025 (08.05.2025-10.05.2025)


இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமல்:

  • இந்தியாவும், பாகிஸ்தானும் அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளையும் 10.05.2025 மாலை 5 மணி முதல் நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டன என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
  • இது தொடர்பாக, 10.05.2025 மாலை 6 மணி அளவில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் (DGMO) 10.05.2025  பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய DGMO-வை அழைத்தனர். இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் நிலம், வான், கடல் என அனைத்து வகையான துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் இரு தரப்பினரும் நிறுத்துவதாக அவர்களுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்டது. 
  • இதை செயல்படுத்த இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல்கள் மே 12-ஆம் தேதி 12 மணிக்கு மீண்டும் பேசுவார்கள்" என்று தெரிவித்தார்.
  • இந்தியா - பாகிஸ்தான் இடையே அமெரிக்கா நடத்திய சமரச பேச்சுவார்த்தையை அடுத்து, கடந்த 7-ம் தேதி முதல் நடந்து வந்த மோதல் 4 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் இதனை அவர் அறிவித்தார். இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “அமெரிக்காவின் தலையீட்டால் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியா - பாகிஸ்தான் மோதலை முழுமையாக, உடனடியாக நிறுத்திக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளன. இரு நாடுகளும் புத்திசாலித்தனமான முடிவை எட்டியதற்கு வாழ்த்துகள். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியமைக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.


ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம்:

  • இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையோரப் பகுதிகளில் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் இரு நாடுகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. 
  • இந்திய எல்லைப் பகுதி நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில் முப்படைத் தளபதிகளையும்  சந்தித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். 
  • இந்த நிலையில், ராணுவத் தளபதி உபேந்திர துவிவேதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
  • ”1948 ராணுவ விதி 33-இன் கீழ் ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது. அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள 32 படைகளில் 14 படைகளின் வீரர்களை எல்லைக்கு மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்துக்கு பணியாளர்கள் சேர்க்கவும், நிதி ஒதுக்கீட்டுக்கான அதிகாரமும் பிப். 9, 2028 வரை 3 ஆண்டுகளுக்கு அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அர்னாலா' - உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு :

  • கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ) நிறுவனம் உள்நாட்டிலேயே வடிவமைக்கும் எட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல்களில் முதலாவது கப்பல் (மே 08, 2025) காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டது.
  • இந்தப் போர்க்கப்பல் எல் அண்ட் டி, ஜிஆர்எஸ்இ பொதுத்துறை, தனியார் துறை ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு உற்பத்தியில் தனியார், பொதுத்துறை கூட்டு செயல்பாட்டின் வெற்றியை நிரூபிக்கிறது.
  • இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாக மகாராஷ்டிராவின் வசாய் அருகே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டையான 'அர்னாலா'வின் பெயர் இந்தக் கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.
  • 77 மீ நீளமுள்ள இந்தப் போர்க்கப்பல், டீசல் இஞ்ஜின்-வாட்டர்ஜெட் ஆகிய இரண்டின் அடிப்படையில் இயக்கப்படும் மிகப்பெரிய கடற்படை போர்க்கப்பலாகும்.
  • இந்தக் கப்பல் நீருக்கடியில் கண்காணிப்பு, தேடல், மீட்பு நடவடிக்கைகள், குறைந்த தீவிரம் கொண்ட கடல்சார் நடவடிக்கைகள் ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் இணைவது இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை கணிசமாக அதிகரிக்கும்.
  • 80%-க்கும் அதிகமான உள்நாட்டு உள்ளடக்கத்துடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கப்பல் தற்சார்பு இந்தியா என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை நிலைநிறுத்துகிறது.

 புதிய போப்பை தேர்வு:

  • கத்தோலிக்கத் திருச்சபை தலைமை மதகுருவாக ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய போப் ஆண்டவரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற கார்டினல்களின் முதல் நாள் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படாததால், அந்தக் கூட்டம் இரண்டாவது நாளாக 08.05.2025 தொடங்கியது. 
  • இந்த நிலையில் இன்று இரவு புதிய போப் தேர்வு செய்யப்பட்டதைக் குறிக்கும் விதமாக புகைப் போக்கி வழியாக வெண்புகை வெளியிடப்பட்டது. 
  • உடல்நலக் குறைவு காரணமாக கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவா் போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21 ஆம் தேதி காலமானார். 
  • கத்தோலிக்க திருச்சபை மரபுப்படி, அடுத்த போப்பை தோ்ந்தெடுப்பதற்கான கூட்டம் மே 5 ஆம் தேதியிலிருந்து மே 10-ஆம் தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
  • அதன்படி, வாடிகனிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தின் மூடிய அரங்கத்துக்குள் இதற்கான வாக்கெடுப்பு 07.05.2025 நடைபெற்றது. இந்த ரகசிய வாக்கெடுப்பில் 71 நாடுகளைச் சோ்ந்த 133 கார்டினல்கள் பங்கேற்றனர்.
  • அதன்படி, புதிய போப் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டதாக வாடிகன் அறிவித்தது. ரோம் நகரின் சிஸ்டைன் தேவாலயத்தில் 133 கார்டினால்களும் சேர்ந்து புதிய போப்பைத் தேர்ந்தெடுத்தனர். இதன் அடையாளமாக அங்குள்ள புகைக் கூண்டில் வெள்ளைப் புகை வெளியிடப்பட்டது.
  • புதிய போப்பாக 69 வயதான ராபர்ட் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக அமெரிக்கருக்கு போப்பாக வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் பிறந்தவரான ராபர்ட் ப்ரெவோஸ்ட், பெரு நாட்டில் கத்தோலிக்க திருச்சபை பணிகளை மேற்கொண்டவர். போப் பதவிக்கு அமெரிக்கர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். புதிய போப் இனி 14 ஆம் லியோ என்ற பெயரால் அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாஸ்கோவில் இரண்டாம் உலகப் போர் வெற்றி தின கொண்டாட்டம் :

  • பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், 2025 மே 08 முதல் 09 வரை ரஷ்யாவில் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் வெற்றி தின கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்றார். இரண்டாம் உலகப் போரில் (1941-45) சோவியத் யூனியன் பெற்ற வெற்றியின் 80-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் 2025 மே 09 அன்று மாஸ்கோவில் இந்தக்  கொண்டாட்டம் நடைபெற்றது.
  • போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய திரு சஞ்சய் சேத், வெற்றி தின அணிவகுப்பை, பிற நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் இணைந்து பார்வையிட்டார். வெற்றி தின அணிவகுப்பில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பங்கேற்றது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பின் அடையாளமாக அமைந்தது.
  • இந்தப் பயணத்தின் போது, ​​இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினைச் சந்தித்து 80-வது வெற்றி தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 


தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா மாற்றம்:

  • திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்ததுள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் இன்று (மே 8) இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமங்கள், சுரங்கம் மற்றும் இயற்கைவளத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு 10% சதவீதம் வரி வழங்கும் மசோதா - ஆளுநர் ரவி ஒப்புதல்:

  • தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மீது வரி விதிக்கவும், வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
  • ஆனால் கல்வி நிறுவனம் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனத்தால் அனுமதி கட்டணம் வசூலித்து நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதற்கும் கேளிக்கை வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் அதிகாரம் அளிக்க சட்டங்கள் எதுவும் தற்போது இல்லை.
  • எனவே அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான அனுமதிக் கட்டணத்தின் மீது 10 சதவீதம் கேளிக்கைகள் வரி விதிக்கவும், வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழிவகை செய்ய அரசு முடிவெடுத்தது.
  • இதற்காக தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரிச்சட்டத்தில் திருத்தம் செய்து, புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது.
  • அதன்படி, கல்வி நிறுவனம், சங்கம், குழுமம், யாருடைய பெயரிலாவது அமைக்கப்பட்டுள்ள கழகம் போன்ற நிறுவனங்களின் வளாகங்கள் மற்றும் நுழைவுச்சீட்டு அல்லது பங்களிப்பு அல்லது சந்தா போன்ற கட்டணங்கள் செலுத்த வேண்டிய இடங்கள் ஆகியவற்றில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சியின் அனுமதிக் கட்டணத்தில் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • இந்நிலையில், இந்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தாய் -சேய் இறப்பு விகிதம்:

  • இந்தியா தாய் - சேய் சுகாதாரக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. 2025 மே 07 அன்று இந்திய தலைமைப் பதிவாளர் வெளியிட்ட இது தொடர்பான அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது. தாய் - சேய் இறப்பு விகிதக் குறைப்பில் 2030-ம் ஆண்டுக்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் இந்தியா சிறந்த முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
  • இந்தியாவில் பேறுகால இறப்பு தொடர்பான அறிக்கை 2019-21-ன் படி, நாட்டில் பேறுகால இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. 2014–16-ம் ஆண்டில் ஒரு லட்சம் நேரடி பிறப்புகளுக்கு 130 என இருந்த இந்த விகிதம் 2019–21-ம் ஆண்டில் 93 ஆகக் குறைந்துள்ளது.
  • இதேபோல், புள்ளிவிவர அறிக்கை 2021-ன் படி, குழந்தை இறப்பு விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் 2014-ல் 1000 பிறப்புகளுக்கு 39 ஆக இருந்தது. 2021-ல் இது 1000 பிறப்புகளுக்கு 27 ஆகக் குறைந்துள்ளது
  • பிறந்தவுடன் குழந்தைகள் இறக்கும் விகிதம் 2014-ல் 1000 பிறப்புகளுக்கு 26 ஆக இருந்தது. 2021-ல் இது 1000 பிறப்புகளுக்கு 19 ஆகக் குறைந்துள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2014-ல் 1000 பேருக்கு 45 ஆக இருந்தது, 2021-ல் இது 1000 பேருக்கு 31 ஆகக் குறைந்துள்ளது.  பாலின விகிதம் 2014-ல் 899 ஆக இருந்தது. 2021-ல் இது 913 ஆக உயர்ந்துள்ளது.
  • தாய்-  சேய் இறப்பு விகிதங்களைக் குறைப்பதில் இந்தியாவின் முன்னேற்றம் உலகளாவிய சராசரியை விட அதிகமாக உள்ளது.  1990 முதல் 2023 வரையிலான 33 ஆண்டுகளில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தில் இந்தியா 78% வீழ்ச்சியை அடைந்துள்ளது. இது உலகளாவிய வீழ்ச்சியான 61% என்பதை விட சிறந்த செயல்பாடாக உள்ளது. பிறந்த குழந்தைகளின் இறப்பு விகித வீழ்ச்சியில் உலக அளவில் 54% வீழ்ச்சி என்பதை ஒப்பிடும்போது இந்தியாவில் 70% வீழ்ச்சி உள்ளது.


ஐக்கிய நாடுகள் சபை வன கவுன்சிலின் 20வது அமர்வில் இந்தியா பங்கேற்றது:

  • 2025 மே 5 முதல் 9 வரை நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை வன கவுன்சிலின் 20வது அமர்வில் இந்தியா பங்கேற்றது.
  • 2017–2030க்கான ஐக்கிய நாடுகள் சபையின் வனங்களுக்கான உத்திசார்  திட்டத்தின் கீழ் தன்னார்வ தேசிய பங்களிப்புகளை அடைவதற்கான தனது கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய இந்தியா, வனப் பாதுகாப்பு மற்றும் நிலையான வன மேலாண்மையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துரைத்தது. ஆரவல்லி பசுமைச் சுவரின் கீழ் நிலத்தை மீட்டெடுப்பது, கடந்த பத்தாண்டுகளில் சதுப்புநிலப் பரப்பில் 7.86% அதிகரிப்பு, பசுமை இந்தியா இயக்கத்தின் கீழ் 1.55 லட்சம் ஹெக்டேர்களுக்கு மேல் காடு வளர்ப்பு மற்றும் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று பிரச்சாரத்தின் கீழ் 1.4 பில்லியன் மரக் கன்றகளை நடுதல் போன்ற முக்கியமான தேசிய முயற்சிகளின் விளைவாக, அண்மையில் இந்திய வன நிலை அறிக்கையின்படி, இந்தியாவில் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
  • கூட்டு ஆராய்ச்சி, அறிவு பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாடு மூலம் புலி உள்ளிட்ட ஏழு பெரிய பூனை இனங்களைப் பாதுகாப்பதை ஆதரிப்பதற்காக இந்தியாவால் தொடங்கப்பட்ட உலகளாவிய தளமான சர்வதேச பெரிய பூனை கூட்டணியில் இணைய அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்தது.


இந்தியா - சிலி நாடுகளிடையே ஒப்பந்தம்:

  • இந்தியா - சிலி நாடுகளிடையே 2025 - ம் ஆண்டு மே 08 - ம் தேதி விரிவான பொருளாதார கூட்டு நடவடிக்கைகளுக்கான  குறிப்பு விதிமுறைகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் இரு நாடுகள் இடையேயான வர்த்தக உறவுகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
  • இவ்விரு நாடுகளும் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட அம்சங்கள் அடங்கிய இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கான அந்நாட்டுத் தூதர்திரு. ஜுவான் அங்குலோ, மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் வர்த்தகத் துறை இணைச் செயலாளரும், இந்திய பிரதிநிதிக் குழுவின் தலைவருமான திரு. விமல் ஆனந்த், ஆகியோர் கையெழுத்திட்டனர்.
  • இந்தியா - சிலி இடையே தற்போதுள்ள பயங்கரவாத தடுப்பு ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் விரிவான பொருளாதார கூட்டு நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தம் அமைந்துள்ளது. மேலும், டிஜிட்டல் சேவைகள், முதலீட்டு ஊக்குவிப்பு, கூட்டு ஒத்துழைப்பு, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்,  அரியவகை கனிம வளங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவான வாய்ப்புக்களை உள்ளடக்கி, பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த உயவு எண்ணெயை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்:

  • மிகச்சிறந்த செயல்பாட்டுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த உயவு எண்ணெயை  குவஹாத்தியில் உள்ள  அறிவியல் தொழில்நுட்ப மேம்பட்ட கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது  உராய்வு குறைப்பை கணிசமாக அதிகரிப்பதோடு ஒட்டுமொத்த செயல்பாட்டையும் விரிவுபடுத்துகிறது. மேலும் மரபுசார்ந்த  உயவு எண்ணெய்க்கு நீடிக்கவல்ல மாற்றாக இருப்பதோடு திறன் மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் இது தீர்வு காண்கிறது.
  • மரபுசார்ந்த கனிம அல்லது ரசாயன கூட்டுப்பொருட்களைக் கொண்ட செயற்கை எண்ணெய் அடிப்படையில் தயாரிக்கப்படும் உயவு எண்ணெய் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் நீடிக்கவல்ல மாற்றுக்கான தேவை ஏற்பட்டது.
  • இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி நிறுவனமான குவஹாத்தியில் உள்ள  அறிவியல் தொழில்நுட்ப மேம்பட்ட கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் புதிய உயவு எண்ணெயை உருவாக்கி உள்ளனர்.

கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு:

  • டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்துள்ளார். 07.05.2025 ஓய்வு குறித்து ரோஹித் பகிர்ந்தார். அவர் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.
  • 38 வயதான ரோஹித் சர்மா, இந்திய அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டு முதல் 67 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 116 இன்னிங்ஸில் 4,301 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 212 ரன்கள் எடுத்துள்ளார். 12 சதம், 18 அரை சதம் பதிவு செய்துள்ளார். 91 சிக்ஸர்கள், 473 ஃபோர்களை விளாசி உள்ளார். அவரது பேட்டிங் சராசரி 40.57. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி, ரோஹித் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியாக அமைந்தது.

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி 2025:

  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
  • ஸ்பெயினிலுள்ள மாட்ரிட்டில் நடைபெற்ற ஒற்றையர் இறுதிப் போட்டியில் அரினா சபலென்காவும், அமெரிக்க வீராங்கனை கோகோ காப்பும் மோதினர். இதில் சபலென்கா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா 3-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!



Post a Comment

0Comments

Post a Comment (0)