- ஐ.நா. மக்கள் தொகை நிதியம் (யுஎன்எப்பிஏ) 2025-ம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
- இந்த ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடியாகவும் சீனாவின் மக்கள் தொகை 141 கோடியாகவும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை 144 கோடியாக இருந்தது.
- ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மக்கள் தொகை அளவை பராமரிக்க, ஒரு பெண் சராசரியாக 2.1 என்ற விகிதத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் (டிஎப்ஆர்) 1.9 ஆக குறைந்துள்ளது. 1970-களில் 5 ஆக இருந்த இது படிப்படியாக குறைந்து வருகிறது. கல்வி அறிவு அதிகரித்தது மற்றும் கருவுறுதல் தொடர்பான சுகாதார வசதிகள் அதிகரித்ததுமே இதற்குக் காரணம்.
- இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தாலும் 0 முதல் 14 வயதுக்குட்பட்டோர் 24%, 10 முதல் 19 வயதுக்குட்பட்டோர் 17%, 10 முதல் 24 வயதுக்குட்பட்டோர் 26% உள்ளனர். நாட்டின் 68% மக்கள் வேலை செய்யும் வயது (15 – 64) உடையவர்களாக உள்ளனர். 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வெறும் 7% ஆக உள்ளது. ஆனால், இது வரும் காலத்தில் அதிகரிக்கும். அடுத்த 40 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக அதிகரிக்கும். அதன் பிறகு மக்கள் தொகை குறையத் தொடங்கும்.
- பிஹார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. பெரும்பாலானவர்கள் கருத்தடை முறைகளை பயன்படுத்தாதது உள்ளிட்ட காரணங்களால் தேவையற்ற வகையில் கருவுறுவதே இதற்குக் காரணம். அதேநேரம், டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் 2%-க்கும் குறைவாக உள்ளது. குறிப்பாக இம்மாநிலங்களைச் சேர்ந்த நடுத்தர குடும்பத்து படித்த பெண்கள் குழந்தை பிறப்பை தள்ளிப் போடுகின்றனர்.
- உலகம் முழுவதும் இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த 14 ஆயிரம் பேரிடம் யுஎன்எப்பிஏ சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில், எதிர்பாராத வகையில் கருவுறுவதாக 36% பேர் தெரிவித்தனர். அதேநேரம், அதிகமாக அல்லது குறைவாக குழந்தை பெற வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறவில்லை என 30% பேர் தெரிவித்தனர்.
- குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு உள்ள மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக பொருளாதார வசதி உள்ளது என 10-ல் 4 பேர் தெரிவித்தனர். வேலை பாதுகாப்பின்மை (21%) வீட்டுவசதி இல்லாமை (22%) மற்றும் குழந்தை பராமரிப்பு இல்லாமை (18%) ஆகிய காரணங்களைக் கூறினர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : இந்து தமிழ் திசை (12.06.2025)